நாட்டில் சுகாதார சேவையின் மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இலவச சுகாதார சேவையை முன்னேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“தரமான சேவையை பெற்றுக் கொடுக்க ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். சுகாதாரக் கல்வி, போஷாக்கு, உளநலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொற்றாநோய்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், உலகில் வளர்ந்த நாடுகளில் காணப்படும் சுகாதார சேவைக்கு நிகரான சுகாதார சேவையை உருவாக்கும் நோக்கில் இந்த நிபுணர் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கை மக்களுக்கு தரமான, வழக்கமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.” என்றார்.