நசீர் அஹமட் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன்

 

-மன்னார் நிருபர்-

 

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாகவும் அவருக்கு வழங்கிய பதவி பற்றியும் மிக இழிவாக அமைச்சர் நசீர் அஹமத் விமர்சித்திருக்கிறார். ஒரு அமைச்சரவை அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இப்படி மிக மோசமான ஒரு கருத்தை சொல்லி இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாடு இங்கு இருக்கும் எல்லோரும் ஒன்று. வடக்கு கிழக்கு தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம். அதே போன்று மலையகத்தில் இருக்கும் எங்களுடைய தமிழர்கள் இங்கே வவுனியாவில் இருக்கிறார்கள். அவர்கள் மலையக தமிழர்கள் அல்ல. அவர்கள் வவுனியா தமிழர்கள்.

ஆகவே அந்தந்த பிரதேசங்களில் இருக்கிறவர்கள் அந்தந்த இடங்களில் ஆட்சி அமைப்பது, வேலை செய்வது, அவர்களின் உரிமை. அரசாங்க வேலை என்பது அந்தந்த ஊரில் வழங்குவதில்லை. அரச உத்தியோகத்தர்கள் இலங்கையின் எல்லா இடத்திலும் வேலை செய்வார்கள். ஆகவே அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்த கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர். அவர் ஒரு ஆளுநர் என்றும் பாராது ஒரு திறமையானவர் என்று பாராது அந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவரை பொதுவெளியில் ஏளனம் செய்கின்ற அமைச்சர் அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயவு செய்து இப்பிடியான கருத்துக்களை பொது வழியில் சொல்லாதீர்கள். நீங்கள் இப்படியான கருத்துக்களை சொல்வீர்களா இருந்தால் நீங்கள் ஒரு மோசமான அமைச்சராக நீங்கள் ஒரு மோசமான சிந்தனை உடையவர்களாக கருதப்படுவீர்கள்.

ஆகவே உங்களுடைய மரியாதை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். எங்களை பொறுத்த வரையில் வடக்கு கிழக்கிலும் குறிப்பாக கிழக்கிலே செந்தில் தொண்டமான் அவர்கள் ஆளுநராக வந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தன்னுடைய திறமையை நிச்சயம் காட்டுவார்.

நஸீர் அஹமட்டுக்கு ஒன்று சொல்கிறேன். வடக்கு கிழக்கு என்பது இணைந்த தாயகம். அதை பிரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற உரிமை உங்களுக்கு இல்லை. நீங்கள் அந்த தகுதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் பிரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற அந்தஸ்து உங்களுக்கு இல்லை.

இது வடக்கு கிழக்கு இணைந்து தாயகம் .தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாகத்தான் பார்க்கப்படுகின்றது.

ஆகவே நீங்கள் உங்களுடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய மரியாதை இல்லாமல் போகும்.

நீங்கள் ஒரு அந்தஸ்தில் இருக்கும் நிலை நிச்சயமாக மக்களால் ஏளனம் செய்யப்படும்.

நீங்கள் அந்த அந்தஸ்தில் இருந்து அந்த தகுதியில் இருந்து கீழே இறக்க படுவீர்கள் என்று சொல்லிக்கொண்டு உடனடியாக நீங்கள் மன்னிக்க கேட்டுக் கொள்ள வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்