தேக்குமர குற்றிகளுடன் சந்தேகநபர் கைது : 5 இலட்சம் இலஞ்சமாக வழங்க முயற்சி

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலமாக, சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்க மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.

கனகராயன்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி டிப்பர் வாகனத்தில் கருங்கல் கிரவலுக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட 22 தேக்க மரக் குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீசாலை பகுதியில் கடமையில் நின்றிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சந்தேக நபர் பொலிஸாருக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட போதிலும் கைது நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

கைதான சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்