தூய்மையான பொதுச் சேவையில் அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊழியர்களின் பங்கும் பொறுப்பும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்வானது நேற்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் நடைபெற்றது.
“நேர்மையான தேசத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை முடித்துக் கொண்டு வீடுகளுக்கு செல்லும் போது, தாங்கள் செய்த பணிகளில் திருப்தியடைய வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம், ஒரு பொது அதிகாரியின் வரையறை,ஒரு பொது அதிகாரியின் பொறுப்பு மற்றும் பொறுப்புணர்வைத் தவிர நேர்மை ஏன் தேவைப்படுகிறது என்பது குறித்தும் மதிப்புமிக்க விழிப்புணர்வை மாவட்ட அரசாங்க அதிபர் எடுத்துரைத்தார்.
மேலும் பொதுமக்களுக்கு தூய்மையான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதன் வளர்ச்சிக்காக ஒரு பொது நிறுவனத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொதுச் சேவைக்கு அரச அதிகாரிகளின் அணுகுமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன்,மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.