கொழும்பு முகத்துவாரம் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு முச்சக்கர வண்டியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ரந்திய உயன தொடர் மாடி வீடமைப்பு திட்ட பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான படா ரஞ்சி என்று அறியப்படும் செந்தில் ஆறுமுகன் என்ற 40 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களின் பின்னர் படா ரஞ்சி தைப்பொங்கல் தினமான நேற்று குறித்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், தற்போது இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பூங்கொடி கண்ணாவின் உதவியாளர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.