-மூதூர் நிருபர்-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 10 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.தாஹிர் மற்றும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் நகரபிதா ஹில்மி மகரூப் தலைமைகளில் இவ் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் பின்னர் முன்னாள் கிண்ணியா நகர பிதா ஹில்மி மகரூப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 சபைகளில் 10 சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது.இதில் 5 சபைகளில் எமது கட்சி ஆட்சியமைப்பதில் தாக்கம் செலுத்தும் என தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து 136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.