தம்பலகாமத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை : வீடுகள் உடைந்து பலத்த சேதம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீசிய சுழல் காற்று காரணமாக தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுரம், இக்பால் நகர் முதலான பகுதிகளில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட வீடுகளும், கடை ஒன்றும் கூரைகள் அள்ளி வீசப்பட்டுள்ளதுடன் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன

சிலருக்கு சாதாரண காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனமழையுடன் வீசிய காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் மற்றும்  மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தற்காலிக இடம் இன்றி அடுத்த மழை பெய்தால் எங்கே செல்வது எனவும்,  பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.