தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரனிடம் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நான்கு மணி நேரம் விசாரணை
(மன்னார் நிருபர்)
(16-08-2022)
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்காக சென்றிருந்தார்.
இதன் போது சுமார் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப் பட்டுள்ளேன்.
அடிப்படை ஆதாரமில்லாத அர்த்தமில்லாத முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயங்களை ஊடகத்தின் அடிப்படையில் வெறும் கற்பனையில் விசாரணை நடைபெற்றது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் எமது செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட விசாரணை நடைபெற்றது.
இவ்வாறான தொடர் விசாரணைகளை கண்டு அச்சமடையத் போவதில்லை என்றும் தமது சமூக பணி தொடரும், என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.