கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அன்னை இல்ல வீதி, கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த கஜன் சாளினி (வயது – 34) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நத்தார் தினத்தன்று கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என நால்வர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களைச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த வேளை இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில் கணவனும், மனைவியும், ஒரு பிள்ளையும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். மேலதிக சிகிச்சைக்காக மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.