உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.
டின் மீன் உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் தேவானந்தாவிற்கும் இடையில் கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, டின் மீன் தொழில்துறை எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும், அரசாங்கம் விதித்துள்ள வற் மற்றும் செஸ் வரிகளினால் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் விலைக்கு தமது உற்பத்திகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சரிடம் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.