-யாழ் நிருபர்-
யாழ் பொது நூலகத்தில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
அவரது சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியதுடன் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இணைந்து அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது யாழ்ப்பாண பொது நூலகத்தில் அப்துல் கலாமின் மார்பளவு திருவுருவச் சிலையை நிறுவிய இந்திய அரசுக்கு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.
மேலும் டாக்டர் கலாம் யாழ்ப்பாணத்துடனான தொடர்புகள் குறித்து பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியாவை மிகப் பெரிய சாதனைக்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.



