யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவர் அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கி உள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் சிறார்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன.
அத்துடன் பொம்மை, புத்தகப்பை, உட்பட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜசாமதேவ நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.