சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டு கழக 40 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பொதுமைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் “சன்பிளவர் வெற்றிக் கிண்ணம்” போட்டியில் கல்முனை ஜிம்ஹானா அணியை வீழ்த்தி சம்மாந்துறை விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சன்பிளவர் வெற்றிக் கிண்ண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெற்ற சம்மாந்துறை விளையாட்டு கழகம் மற்றும் கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியிக்கு தகுதி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டு கழகம் நிர்ணயித்த 18 ஓவர்கள் முடிவில் 07 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றனர். 143 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகம் 18 ஓவர்களையும் சந்தித்து 09 விக்கட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றனர். 46 ஓட்ட வித்தியாசத்தில் சம்மாந்துறை விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு 30,000 ரூபாய் பணபரிசும் வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்திற்கு 20000 ரூபாய் பணப்பரிசும், கிண்ணமும் வழங்கப்பட்டது.
சன்பிளவர் விளையாட்டு கழக பொதுச் செயலாளர் ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலில் கழகத்தலைவர் எம்.ரீ.எம். நௌசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்சான், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, சாய்ந்தமருது பொதுநிறுவனங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எல். பரீட் ஹாஜி, சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள், சாய்ந்தமருது சன்பிளவர் விளையாட்டு கழக நிர்வாகிகள், போட்டித் தொடரின் அனுசரணையாளர்கள் உட்பட ஊர் முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





