சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை மீன்பிடி இழுவைப் படகு மூலம் கடல் வழியாக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் ஐவர் தென்கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 34 முதல் 67 வயதுக்கு இடைப்பட்டவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விஷேட தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இழுவை மீன்பிடி படகினை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 13 மலைப்பாம்புகள், உடும்பு ஒன்று, ஆமை ஒன்று மற்றும் மூன்று கிளிகள் என்பன மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாக இழுவை மீன்பிடி படகில் கொண்டு வரப்பட்ட விலங்குகளை பரிசோதித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், குறித்த விலங்குகள் இலங்கைக்கு சொந்தமனவை அல்ல என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும், மீன்பிடி படகு மற்றும் பறவைகள் , ஊர்வன என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்