-அம்பாறை நிருபர்-
கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு பிரபல வியாபாரிகளையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் கைதான 2 பிரபல வியாபாரிகளையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது கல்முனை நீதிமன்ற நீதவான் 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கல்முனையில் கேரள கஞ்சாவுடன் பிரபல ஆடை வியாபாரி ஒருவரையும், கடிகாரம் திருத்தும் வேலை செய்யும் ஒருவரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கல்முனைக்குடி 14 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், மருதமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சந்தேக நபரொருவருமே கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 12 கிலோகிராம் 230 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்