-பதுளை நிருபர்-
தனது கணவனை நேற்று சனிக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கபுருகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
தனது கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்து தன்னையும் இரண்டு பிள்ளைகளையும் தாக்கி தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக நேற்று இரவு 11.30 மணியளவில் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவரினால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உடன் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் இரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதன்போது குறித்த நபர் பொலிஸாரினால் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மரணித்தவரின் மனைவி மஹியங்கனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.