-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-கல்லம்பத்தை என்னும் ஊரானது திருக்கோணமலை நகரத்திலிருந்து வடபுறமாக 52 கி.மீ தொலைவில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு மீள் குடியேற்ற எல்லைக் கிராமமாகும்.
இந்த ஊரில் வாழும் மக்கள் குடிநீரின்றி மிகவும் துன்பப்பட்டனர். இந்த சிக்கலைத் தீர்க்கும் பொருட்டாகத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் கடந்த மூன்று மாத காலத்தில் 120 அடி ஆழமான 12 குழாய்க் கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளது.
இதற்கான பாரிய முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர் எஸ். குகதாசன் முன்னின்று செயற்பட்டு வந்தார்.
இதற்கான அனுசரணையை அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி முருகன் கோவிலும், அவுஸ்திரேலிய பொறியியலாளர் அற நிதியமும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழாய் கிணறுகள் அமைத்ததன் மூலம் கல்லம்பத்தை மக்களது குடிநீர்ச் சிக்கல் தீர்வதோடு, அவர்கள் சிறு தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு அவர்களது சமூக – பொருளாதார நிலையை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

