மணியன்குளம் பகுதியில் வசிக்கும் ஐம்பது தெரிவிசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பூமணி அம்மா அறக்கட்டளையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப் பணியாக ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்இ தீவகம் வேலணை மேற்கு, சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசாவின் (பிரான்ஸ்) நிதி ஏற்பாட்டில், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இவ்வாறு பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்னம் தலமையில் அதன் நிர்வாக சபை உறுப்பினர்களான இ.மயில்வாகனம், பொறியியலாளர் சா.தவசங்கரி, ஓய்வு நிலை வங்கி முகாமையாளர் ய.தேவதாஸ் ஆகியோர் நேரில் சென்று குறித்த பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
இதேவேளை கடந்த 7ஆம் திகதி அன்று பூமணி அம்மா அறக்கட்டளையினரால் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கும் இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
