கியூ.ஆர் முறையால் தேங்கி கிடக்கும் எரிபொருள் : விற்பனை இலாபம் பாதிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருட்கள் விற்பனையின்றி தேங்கியுள்ளன, என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது கியூ.ஆர் முறைமையில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பெற்றோலை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை அனைவரும் தடையின்றி பெறக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்புகள் தெரிவித்துள்ளன.

வாரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருளையே ஒருவர் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசல் என்பன விற்பனை செய்ய முடியாமல் தேங்கி இருப்பதால், புதிதாக எரிபொருளை கொண்டுவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது வழமையான விற்பனை இலாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.