பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன் தொடர் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக, காலி முகத்திடலில் நடைபெற்ற “சங்கமம் 2026” நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தியாவில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டின் போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் கீழும், இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலிடேஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இன்று (14/06) கொழும்பு காலி முகத்திடலில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.
“சங்கமம் 2026” எனும் பெயரில் நடைபெற்ற இப்பெரும் விழாவில் 5,000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து, 10,000 கால் சலங்கைகளின் ஒலியை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து உலக சாதனையை நிகழ்த்தினர்.
கடலலைகளின் ஓசையை மிஞ்சும் வகையில் சலங்கை ஒலி எழுந்த காலி முகத்திடல், அன்று தமிழ் கலாசார பெருமையின் சின்னமாக மாறியது. பரதநாட்டியத்தின் நுணுக்கமும் ஒற்றுமையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினார். இலங்கை மண்ணில் தமிழ் கலையின் சிறப்பை உலகிற்கு வெளிப்படுத்திய இந்த தருணம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒன்று என அவர் தெரிவித்தார்.
இந்த வரலாற்று நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர். சலங்கை ஒலியால் அதிர்ந்த கடற்கரைப் பகுதி, இலங்கை தமிழரின் கலைத்திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் சான்றாக அமைந்தது.
“சங்கமம் 2026” உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததை உறுதிப்படுத்தும் வகையில் கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் சான்றிதழ் பிரதி அமைச்சரின் கைகளில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை இலங்கையில் நடைபெற வழிவகுத்த பிரதி அமைச்சருக்கு பெற்றோரும் மாணவர்களும் நன்றி தெரிவித்ததுடன், இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகளுக்கு மேலும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் கடல்தொழில் மற்றும் நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய அதிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.