இன்றைய நாட்களில் இணையத்தில் டிரெண்டாகும் விதமாக வித்தியாச வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை செய்வது இக்காலத்தில் வாடிக்கை நிகழ்வாக மாறிவிட்டது. குறிப்பாக, இதுபோன்ற டிரெண்டிங் ரீல்ஸ் வீடியோக்கள் திருமணத்தை ஒட்டியே நடைபெறுகிறது. இது போன்ற செயல்கள் சில முறை அத்துமீறலாக மாறி தேவையற்ற சிக்கலில் கொண்டு போய் சேர்த்து விடும். அப்படி ஒரு வினோத செயலில் ஈடுபட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு மணப்பெண் பொலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த பெண் திருமண கோலத்தில் ஊர்வலமாக சென்ற வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதுவே சர்ச்சையாகவும் மாறியது.
பொதுவாக காருக்குள் அமர்ந்து கொண்டு தான் ஊர்வலம் வருவார்கள். இந்த பெண்ணோ SUV எனும் கார் ஒன்றின் முன்பக்கமுள்ள போனெட்(Bonnet) பகுதியின் மேல் அமர்ந்து ஆடம்பர உடை, நகை என மணக் கோலத்தில் சாலையில் ஊர்வலம் வருகிறார். இது வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கார் கூரை மீது இவ்வாறு அமர்ந்து பயணிப்பது மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்பானது என்ற நிலையில், இது உத்தரப் பிரதேச போக்குவரத்து போலீசார் கவனத்திற்கும் சென்றது. அதன் பேரில், கார் எண்ணைக் கொண்டு பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ், ரூ.15,500 தண்டப்பணம் விதித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்