காதலனுடன் நீர்வீழ்ச்சி பார்க்க சென்ற சிறுமி சடலமாக மீட்பு

கடந்த முதலாம் திகதி இளைஞன் ஒருவருடன் கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சிறுமியின் சடலம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை – நெட்டெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சிதோமினி சுகன்யா (வயது 17) என்ற யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளது

உயிரிழந்த சிறுமி கடந்த முதலாம் திகதி தனது காதலனுடன் நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றுள்ளார்.

இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கடும் மழையினால் குறித்த இளைஞனும் யுவதியும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸாரும் பிரதேசவாசிகளும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும், கலபொட நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் பாய்ந்ததால் கலபொட கால்வாயின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளதால் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக பிரதேசவாசி ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, காணாமல் போன சிறுமியின் உறவினர்களுடன், சடலம் காணப்பட்ட இடத்திற்குச் சென்று சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.