இந்தியா தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 21 பேரின் உடல்கள் கோமுகி ஆற்றங்கரையோரம் ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தீப்பெட்டி போல் கட்டைகளை வைத்து வரிசையாக தகனம் செய்ய இடம் அமைக்கப்பட்டது. இறுதி ஊர்வலம் தொடங்கிய போது மழை பெய்ததால், உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதிச்சடங்குக்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள் நனைந்துவிட்ட நிலையில் மீண்டும் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஒவ்வொருவரின் உடல்களாக தகனம் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி முழுவதுமே சோகத்துடன் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்