கல்முனை மாநகர சபை நிர்வாகத்திற்கு எதிராக உச்சகட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊழல்கள், அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் காரணமாக பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கல்முனை மாநகர சபைக்கு புதிதாக நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை முதல்வர், ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், துப்பரவு தொழிலாளி, வேலைத்தள உதவியாளர் போன்றோருக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் போன்றோர் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் போன்றோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலையே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பதவிவகித்திருந்த ஏ.எல்.எம். அஸ்மி ஆளுநரினால் கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோது அவரை கல்முனை மேயர், ஊழல் குற்றசாட்டு விசாரணையின் கீழ் இருந்துவருவதுடன் கடந்த மார்ச் மாதம் விடுவிப்பு செய்யப்பட்ட ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், சிற்றூழியர்கள் இணைந்து தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் கல்முனை மாநகர ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் என்.சிவலிங்கம், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோதும் அவரும் தடுக்கப்பட்டார்.

இவ்வாறு தொடர்ச்சியாக கல்முனை மாநகர ஆணையாளர்கள் பதவியேற்காமல் தடுக்கப்படுவது தொடர்பில் கிழக்கு மாகாண உயர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள், முறைகேடான நிர்வாகம், அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கள், நிறைந்து பல்வேறு தளங்களில் விசாரணை இடம்பெற்றுவரும் கல்முனை மாநகர நிர்வாகத்தினரின் இவ்வாறான செயற்பாடு ஆளுனரினதும், அரச உயரதிகாரிகளினதும் அதிகாரங்களுக்கு விடப்படும் சவாலாக அமைந்துள்ளது.

தகவலறியும் சட்டத்தினூடாக ஒழுங்கான தகவலைகளை வழங்காமை, ஊழலுக்கு துணைபுரிய மறுக்கும் உத்தியோகத்தர்களை பழிவாங்குதல், துஸ்பிரயோகங்களுக்கு துணைபோகாத நீதியான அதிகாரிகளை அழுத்தம் கொடுத்து சபையை விட்டு வெளியேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நிறைய விடயங்கள் இங்கு இடம்பெற்று வருகின்றது.

ஆளுநரினால் நியமிக்கப்படும் ஆணையாளர்களை சாதாரண துப்பரவு தொழிலாளர்களும், வேலைத்தள தொழிலாளிகளும் சவாலுக்குட்படுத்துவதும், கடந்த மார்ச் மாதம் முதல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்காக விடுவிக்கப்பட்ட ஆணையாளர் சட்டவிரோதமாக தனது பதவியில் அமர்ந்துகொண்டு கோப்புக்களுக்கு ஒப்பமிடுவதும், சம்பளம் பெறுவதும், புதிய ஆணையாளரை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்துவதும், அரசியல் தலையீடுகள் மூலம் அழுத்தம் பிரயோகிப்பதும் ஏற்புடையதல்ல.

ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களை உரியமுறையில் விசாரணை செய்து பணி நீக்கம் அல்லது பணி இடைநிறுத்தம் செய்து விசாரணை மேற்கொண்டு கல்முனை மாநகரத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும், என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.