கற்பிணி தாயின் தங்க ஆபரணம் அபகரிப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் கர்ப்பிணித் தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கர்ப்பிணித் தாயொருவர் மதியநேர உணவு இடைவேளையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்ற போது அன்புவழிபுரம் பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இதன்போது அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தாய் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவிக்கின்றனர்.