தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது.
இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” என அழைக்கப்படுவதாக “லைவ் சைன்ஸ்” எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டிஉயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் கூறுவது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.