யாழ்ப்பாணம்-நல்லூர் பகுதியைச் சேர்ந்த எழுபது வயதுடைய கணக்காளர் ஒருவரின் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர், குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது வங்கிக்கணக்கு மாற்றிக்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தன்னுடைய வங்கிக் கணக்குக்கு ரூ.15 இலட்சம் மாற்றப்பட்டதை அடுத்து அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு அப்பெண் தலைமையிலான குழுவினர் தலைமறைவாகிவிட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கணக்காளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் பெண்ணை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கணக்காளருக்குச் சொந்தமான காணி விற்பனைக்கு இருப்பதை அறிந்த பெண் உள்ளிட்ட குழுவினர் வேனில் வந்து இதனைச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் மற்றும் குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.