நுவரெலியா கட்டுமான பகுதியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மஹவலவத்த கீழ் பிரிவு இரத்தினபுரியை சேர்ந்த சுப்பிரமணியம் வடிவேலு (வயது – 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சனிக்கிழமை இரவு அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரவு முழுவதும் தங்கியிருந்த இடத்தில் இவரை காணவில்லை எனவும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தேடிப்பார்த்த போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் வெளியே இறந்த நிலையில் கிடந்ததாக சக தொழிலாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த கட்டிடத்தில் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே விழுந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளின் பின்னர் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.