ஏகாதசி விரதம்

🎗இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம். ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது.

🎗அனைத்து ஏகாதசி விரதங்களும் பாவங்களை போக்கக் கூடியது என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி கூடுதல் சிறப்பு பெற்றவை ஆகும்.

🎗குறிப்பாக பங்குனி மாதத்தில் வரும் பாபமோசனி ஏகாதசி, பாவங்களை அடியோடு நீக்கி, அனைத்து விதமான நலன்களையும் தரக் கூடியதாகும். ஏகாதசி விரதம் இருப்பதால் விரதம் இருப்பவர் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினர்களும் பலன் அடைகிறார்கள்.

🎗ஏகாதசி என்பது பெருமாளுக்குரிய திதி யாகும். திதிகளில் 11 வது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் வீதம் வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

🎗பாபமோசனி என்பதில் பாபம் என்றால் ஒருவர் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்கள். மோசனி என்றால் பாவங்களை அழிப்பது என்று பொருள். பாபமோசனி என்பது ஒருவர் செய்யும் பாவங்களை அழிக்கக் கூடிய ஏகாதசி என்று பொருள்.

🎗இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி இந்த ஆண்டு ஏப்ரல் 05ம் திகதி வருகிறது. ஏப்ரல் 04 ம் திகதி பகல் 12.13 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 05 ம் திகதி காலை 09.59 வரை ஏகாதசி திதி உள்ளது. இதனால் பாபமோசனி ஏகாதசி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 04ம் திகதி பகல் பொழுதிலேயே விரதத்தை துவங்கி விட வேண்டும்.

🎗பாரனை செய்யும் நேரமாக ஏப்ரல் 06 ம் திகதி காலை 05.36 முதல் 08.05 வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையில், அவரின் பதிக்கு உரிய பாபமோசனி ஏகாதசி வருகிறது.

🎗ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து தூய்மையாக நீராடி, வீட்டையும் சுத்தம் செய்து, விஷ்ணு மற்றும் லட்சுமி படங்களுக்கு பூ போட்டு அலங்கரித்து, நெய் விளக்கு ஏற்ற வேண்டும். மஞ்சள் நிற மலர்கள், துளசி படைத்து வழிபடுவது சிறப்பு. பெருமாளுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

🎗மாலையில் ஏதாவது நைவேத்தியம் படைத்து பெருமாளை வழிபட வேண்டும். முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவுகளை தவிர்த்து, பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ லட்சுமி நாராயணாய நமஹ
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே” ஆகிய மந்திரங்களை எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.

🎗ஏகாதசி விரதம் இருக்கும் அனைவரின் பாவங்களும் நீங்கி விடுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. வெறும் உபவாசமாக இருந்து, பெருமாளை வழிபட்டு, விரதம் இருப்பதால் மட்டும் பாவங்கள் தீர்ந்து விடாது.

🎗எவர் ஒருவர் தான் கடந்த காலத்தில் செய்த பாவங்களுக்காக மன வருந்தி, அதில் இருந்து விடுபட வேண்டும் என உண்மையாகவே விரும்பி, பெருமாளின் பாதங்களை சரணடைந்து, அவரிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைக்கிறாரோ அவரின் பாவங்கள் மட்டுமே நீங்கி, வைகுண்ட பதவி கிடைக்கும்.

🎗அதோடு இனி வாழும் காலத்திலும் கடந்த காலத்தில் செய்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்.

🎗அப்படி பெருமாளே கதி என சரணடைந்து, மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து, புண்ணிய காரியங்கள், நல்ல எண்ணங்களுடன் வாழ்கிறோரோ அவரின் பாவங்கள் மட்டுமே ஏகாதசி விரதம் இருப்பதால் நீங்கும்.