உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட அரசிடம் கோரிக்கை

-கல்முனை நிருபர்-

நாட்டின் இன்றைய பொருளாதார நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை கருத்தில் கொண்டு வீணான செலவாக அரசுக்கும் மக்களுக்கும் சுமையாக இருக்கும் நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட்டு, ஆணையாளர்கள், விசேட ஆணையாளர்கள், சபை செயலாளர்களிடம் சபைகளை ஒப்படைப்பதன் மூலம் நாட்டின் நிதியில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சேமிக்கப்பட வாய்ப்புள்ளது, என தெரிவித்து அல்- மீஸான் பௌண்டஷன்,  ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும், நாட்டு மக்கள் கடுமையான கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு பணமில்லாத திண்டாட்டத்திலும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய பிரச்சினைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

எரிபொருள் தட்டுப்பாடு முதல் மின்சார தடை வரை நாடு கடுமையான சிக்கலை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில் மக்களின் வரிப்பணமும், அரச நிதியும் வீணாக்குவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவு, உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் பாவிக்கும் எரிபொருள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் சலுகைகள் தொடர்பில் இப்போதைய நாட்டின் வறுமை நிலைக்கு எந்த காரணங்களை முன்வைத்தாலும் அது வெறும் சமாளிப்பாகவே அமைந்துவிடும்.

ஆதலால், இந்த உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட்டு அதற்காக மாதாந்தம் பாவிக்கப்படும் பெருந்தொகை நிதியை நாட்டின் நலனுக்காகவும் தேசத்தை கட்டியெழுப்பவும் முடியும், என்று தெரிவித்துள்ளனர்.