
உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டு நிகழ்வு
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்றும் நாளையும் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள நிலையில் ஆரம்ப நிகழ்வாக கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் ஆகியோர் இன்று காலை திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து 1000 இற்கும் மேற்பட்ட தமிழ் கலைஞர்களின் பங்குபற்றலுடன் ஊர்தி பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் வெபர் மைதானத்தை நோக்கி விழாவில் பங்குபற்றுவோரும், பொது மக்களும் நடைபவணியாக வந்தடைந்தனர்.
மங்கள விளக்கேற்றப்பட்டு கலைவிழா ஆரம்பமானது.
விழாவில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கையில் நடைபெற்றத்தை நினைவூட்டும் முத்திரையும் வெளியிடப்பட்டு அதன் முதல் பிரதி ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சரவணன் மற்றும் ஏனைய அழைப்பாளர்களுக்கும் முத்திரை வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வு தொடர்பான விசேட மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து கருத்தரங்குகள் இடம்பெற்றது முதல் நாளுக்கான தமிழ் கலை விழா நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாளுக்கான கலை நிகழ்வுகளும் கருத்தரங்குகளும் நாளை சனிக்கிழமை கிழக்கு பல்கலைகழகத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திர குமார், உலகத் தமிழ் கருத்தரங்கு தலைவர் க.சுபாஷினி, மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சரவணன், கல்லாறு சத்தீஸ், கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர்கர், என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

