உடப்பு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று நேற்று செவ்வாய்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் நேற்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.