-திருகோணமலை நிருபர்-
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளில், கந்தளாய் வலயம் மிகவும் பின்னடைவை சந்தித்த நிலையில் கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் கல்வி வலயத்தில் பணிப்பாளராக பணியாற்றிய இ.ஜி.பி.ஐ தர்மதிலவின் காலத்தில் கந்தளாய் கல்வி வலயத்தில் கல்வி தரம் குறைந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இவர் இடமாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கடந்த மூன்றாம் திகதி திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய இவர் இடம் மாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இவர் முன்னர் பணியாற்றிய மாகாண கல்வி அமைச்சின், விளையாட்டுக்கான பிரதி பணிப்பாளராகவே இடம் மாற்றப்பட்டுள்ளார். கிழக்கில் 17 கல்வி வலயங்கள் செயல்படுகின்றன. இந்தப் பதினேழு வலயங்களிலும் 17 ஆவது இடத்திலேயே கந்தளாய் கல்வி வலயம் பெறுபேறுகளில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தர்மதிலகஇ ” எனது இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் ” என கூறினார்.
மேலும் இந்தக் கல்வி வலயத்தின் கல்வி நடவடிக்கைகளை பாளாக்கிய இவரோடு சேர்ந்து செயல்பட்ட ஏனைய அதிகாரிகளும் மாற்றப்பட வேண்டும் என கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.