இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உண்ணாவிரத போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்-

நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியா சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும், இலங்கை உறவுகள் தம்மை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரி, திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள பலர் பல வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகாலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வருகைதந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள்.

நீண்ட காலமாக விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட அவர்கள்,

தாம் நீண்ட காலமாக சிறப்பு முகாமில் விடுதலை கிடைக்குமா? என்ற நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறோம், என்று கவலை வெளியிட்டுள்ளனர்