இலங்கையில சமூக ஊடகங்களுக்கு புதிய ஒழுங்குமுறைச் சட்டம்

இலங்கையில் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் பத்திரிகை மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் சமூக ஊடகங்கள் தொடர்பான சட்டங்கள் அதில் இல்லை எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்தின் நகல் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், இலங்கைக்கு ஏற்ற சட்டங்கள் அடங்கிய சட்டமூலத்தை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பல்வேறு ஊடகத் தளங்களின் தலைவர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.