கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தெனுஜ சஸ்மிர நாணயக்கார (வயது – 6) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த 9 ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக 06 நாட்கள் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும் எவ்வித மாற்றமும் சிறுவனின் உடல் நிலையில் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பின்னர் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிறுவனின் நோயைக் கண்டறிய முடியவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவனை ஒரு இயந்திரத்துடன் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் சுயநினைவு திரும்பாத தெனுஜ, துரதிர்ஷ்டவசமாக தீவிர சிகிச்சை பிரிவில் இறந்துள்ளார்.
இதன் பின்னர் சிறுவனின் நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த சிறுவனுக்கு 3 தடுப்பூசிகளை மருத்துவர்கள் செலுத்தியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் ”குறித்த சிறுவன் காச நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், வழங்கப்பட்ட தடுப்பூசி காரணம் அல்ல” எனவும் தெரிவித்துள்ளார் எனத் தகவலறியப்பட்டுள்ளது.