இலங்கை இராணுவத்தின் காலாட் படையினர்களினால் பொதுமக்களுடனான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு வேண்டுகோளின் அடிப்படையில் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இரண்டு மாடி நிர்வாக கட்டிடத்தொகுதி அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி. ரணசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 காலாட்படை பிரிவு படையினர், இந்த திட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் திரு சண்முகராஜா சுஜென், இந்த வளாகத்தை நிர்மாணிப்பதற்காக இராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை கோரியதாக இராணுவ துறை தெரிவித்துள்ளது.
சகல நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம் மற்றும் அலுவலகப் பிரிவுகளுடன் கூடிய இரண்டு மாடி புதிய கட்டிடம் திறந்து வைக்கும் வைபவத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி, வடமாகாண பிரதம செயலாளர், வவுனியா மாவட்ட செயலாளர், வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

