கிளிநொச்சி ஏ9 வீதி உமையாள்புரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே இதன்போது பலியாகியுள்ளார்.
குறித்த நபர் விஸ்வமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக ஆழியவளை நோக்கிச்சென்றுகொண்டிருந்த போது பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனமானது உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னாள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தினை தொடர்ந்து ரிப்பர் சாரதி கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ரிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியானவரின் மகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவியாவார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.