கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணம் 50 வீதத்தினால் குறைக்கப்படுமென மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மூன்று மாதங்களாக பெய்த தொடர் மழையின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், நீரினால் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் இலாபம் நிச்சயமாக பொதுமக்களுக்கே கிடைக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அதேவேளை, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையின் கடந்த வருட இறுதி கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டவுடன், மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.