அமெரிக்காவிற்கான இலங்கையின் பதவி விலகும் தூதுவரான மகிந்த சமரசிங்க, தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு தம்மை பதவியிலிருந்து விலகுமாறு ஒருபோதும் கோரவில்லை என்றும், மாறாக தொடர்ந்து தனது பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தனது பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய அவர், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட பல தூதுவர்கள் தங்களது பதவிக்காலம் நிறைவடையும் முன்பே மீள அழைக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.
“அரசு என்னை பதவியை விட்டு வெளியேறுமாறு கூறவில்லை. மாறாக, தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டது. எனது பதவிக்காலம் முழுவதும் தற்போதைய அரசுடன் சிறந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டேன்,” என அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து, உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றிற்கான அனுமதியை பெற்றதாகவும், அமெரிக்க சுங்க வரிகளில் மேலும் குறைப்பு தொடர்பாக இலங்கைக்கு விரைவில் சாதகமான செய்தி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
தனது இராஜதந்திரப் பணிக்காலத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாகக் கூறிய மகிந்த சமரசிங்க, இலங்கைக்கு திரும்பிய பின்னரும் நாட்டுக்காக சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும், எனினும் மீண்டும் அரசியலில் ஈடுபடவோ அல்லது எந்த அரசியல் கட்சியிலும் இணையவோ திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டின் நலனுக்காக அரசாங்கம் தனது உதவியை நாடினால், அரசியல் சார்பற்ற வகையில் பங்களிக்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.