அரசியல்வாதியை இனி சந்திப்பதில்லை -ஸ்ரீ சுமங்கல தேரர்

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையிலுள்ள மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு இதுவரை பொறுப்பான எந்தவொரு நபரும் பதிலளிக்காத காரணத்தினால் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நாட்டின் அரசியல் தலைமைத்துவம் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நான்கு பிரேரணைகளை சமர்ப்பித்த பிரதம தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.