கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என இருவகையான பாடசாலைகள் இனி பேணப்படாமல், கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பாடசாலைகளின் மேற்பார்வை மற்றும் நிர்வாகம் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வகையில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபையிலிருந்து மாறாத நிர்வாக முறைமையின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் நடத்தப்பட வேண்டும் என குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பணம் உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்போது அநீதி இழைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆரம்ப தரம், 6 முதல் 9ம் தரம் மற்றும் உயர்தரம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பாடசாலைகளை நடத்துவதற்கும், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், உயர்தரம் 12ஆம் தரத்துக்கும், சாதாரண தரம் 10ம் தரத்துக்கும் கொண்டு வரப்பட்டு பாடசாலைகள் பராமரிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, தரம் 6 முதல் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலாம் வகுப்பில் இருந்து ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கு முதலில் முன்மொழியப்பட்டதாகவும், அவ்வாறு செய்தால் தாய்மொழி மாணவர்களிடம் இருந்து அந்நியப்பட வாய்ப்புள்ளதாகவும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பான மேலதிக விவாதத்தை கல்வி அமைச்சர் துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் வழங்கியுள்ளதாகவும், அதற்கு அந்தக் குழு இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் கல்வித்துறை தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு மீண்டும் கூடி இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.