நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வனஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பதற்கும் குறித்த பகுதிகளில் மலையேறுவதற்கும் அங்கு முகாமிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை முதல்தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் வனப்பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்காலத்தில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வனப்பகுதியை பார்வையிட விரும்பினால் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டு அவ்வாறு பெறப்படுகின்ற அனுமதி பொலிஸாருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரம் பயணத்தின் நிறைவிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.