
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மீட்பு: சிசிரிவி காணொளியில் பதிவான மர்ம நபர்
-அம்பாறை நிருபர்-
அம்பாறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவ்வாறு சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியை சேர்ந்த முஹம்மத் லுக்மான் (வயது – 3) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
குறித்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் போன நிலையில் குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் தேடிய போது அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளியில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதுடன் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது. அத்துடன் குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலை காணப்படுகின்றது.
இது தவிர மரணம் அடைந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜெயலத் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்