முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

“இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக மோசமான நிலையில் காணப்பட்டாலும் என்றாவது ஒருநாள் மீள் எழுச்சிபெறும் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கின்றார்கள். ஆனாலும், அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கில் செயற்படுவதை சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.

குறிப்பாக, விவசாயம் என்பது இந்த நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயிகள் மீதான அடக்குமுறையே கடந்த கோட்டா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய ஒரு காரணமாகும். எனவே, கோட்டா அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுள்ள புதிய ஜனாதிபதிக்கு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை இந்த உயர்சபையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் அதிகமான விவசாயிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடனிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தாலும், அவர்கள் அந்தத் திட்டத்தில் சரியான முறையில் உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குவதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான காப்புறுதித் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என அறியமுடிகின்றது. அண்மையில் இடம்பெற்ற மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில், விவசாயிகள் மிகவும் வேதனையுடன் தாம் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை கூறியிருந்தார்கள்.

சில பகுதிகளில் குறிப்பிட்ட காப்புறுதித் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அவை ஒருதலைப்பட்சமாகவும் அதிகாரிகளுக்கு விரும்பிய வகையில் வழங்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாய அமைச்சர் இந்த விடயத்தில் கவனஞ்செலுத்தி, கடனிலிருந்து விவசாயிகளை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அதேபோன்று, வட மாகாண மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் கடற்படையினரின் இடையூறுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் பல சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளனர்.

எனவே, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர், இந்த விடயங்களில் கவனஞ்செலுத்தி, மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், நெல் கொள்வனவுக்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று எம்மிடம் முறையிடுகின்றனர்.

வியாபாரிகள் தங்களுக்கேற்றவகையில் விலையை நிர்ணயித்து, மிகவும் குறைந்த விலையில் நெல் கொள்வனவு மேற்கொள்கின்றனர். இதனால் கடனிலிருக்கும் விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள். எனவே, விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை. அல்குர்ஆனை அல்லது ஒரு அரபுப் புத்தகத்தை வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்