மட்டக்களப்பு கரடியனாற்றில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டக்களப்பு – கரடியானாறு பகுதியில் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு கழிவறை கட்டுவதற்காக  கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரிய போது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் கரடியனாறு பகுதியில் வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பொது சுகாதார பரிசோதகர் வீட்டின் உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை பெற்ற நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்