பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து : 13 பேர் பலி!
இந்தியா-மும்பையில் அதிவேகமாக வந்த கடற்படை படகு ஒன்று பயணிகள் படகின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததோடு, 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் தேடுதல் பணியில் கடற்படை மற்றும் கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையின் கேட்வே ஒப் இந்தியா (Gateway of India) பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி 100ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன், நேற்று புதன்கிழமை மாலை படகு ஒன்று புறப்பட்டது.
அந்த வழியாக வந்த கடற்படையின் ரோந்து படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதோடு படகில் சென்ற 101 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை விபத்தில் சிக்கியவர்கள் தங்களை மீட்குமாறு கோரி கூச்சலிடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.