தமிழ் சமூகத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை வழங்கும் – நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சனிக்கிழமை பிற்பகல் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் சந்தித்தனர்.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றை கொண்ட வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் என மோடி தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க