எனது பாட்டனாரில் அன்பு இருக்கிறது என்பதற்காக அவரது சடலத்தை வைத்து அழுதுகொண்டே இருக்க முடியாது!

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது, எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது, ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள நாங்கள் அந்த மக்களின் அரசியல் பொருளாதார நிலைமைகளிலே ஆழமான அறிவு கொண்டு உழைத்து வருகின்றோம், இது தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது, என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

சிவநேசதுரை சந்திரக்காந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் தொடர்பிலான நூல் அறிமுகம் அம்பாறை மாவட்டம் காரைதீவு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்

நான் அரசியல் கடலில் தற்செயலாக நீந்திக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன், அல்லது இழுத்து வரப்பட்ட ஒரு மனிதன், எனக்கான அடையாளமும் அங்கீகாரமும் மட்டக்களப்பு மண்ணில் தான் கிடைத்திருக்கின்றது.

எனக்கு கிடைத்த அடையாளமும் அங்கீகாரத்தையும் சரியாக பயன்படுத்தி மக்கள் பணியாக மாற்றி செய்தி காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டிருக்கின்றேன் என்பதை நீங்கள் எவரும் மறக்க மாட்டீர்கள்.

காரைதீவு பகுதியில் அதிகளவான வைத்தியர்கள் உள்ளார்கள், அங்கு அதிகளவான கார்கள் இருக்கின்றன, ஆனால் அங்கு பெற்றோல் நிரப்பும் நிலையம் இல்லை, இதுவும் ஒரு அரசியல்.

இதுவும் எமது சமூகத்தின் பொருளாதார அரசியல், இவ்வாறு உள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.

இந்த ஆணையை சரியாக எப்படி பயன்படுத்துவது.இப்போது எமது கட்சிக்கு இம்மாவட்டத்தில் அரசியல் செய்கின்ற தேவை எழுந்திருக்கின்றது.

தற்போது அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது, எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது, ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள நாங்கள் அந்த மக்களின் அரசியல் பொருளாதார நிலைமைகளிலே ஆழமான அறிவு கொண்டு உழைத்து வருகின்றோம்.

இந்த உழைப்பில் நாங்கள் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும், இது தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது, எனது பாட்டனாரும் அம்மாவும் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான், அதற்காக எனது பாட்டனார் இறந்து விட்டார் என்பதற்காக அவரது சடலத்தை ஒரு நாளைக்கு மேல் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க முடியாது.

சடலத்தை அடக்கம் செய்துவிட்டு எமது பிள்ளைக்கான பணியினை முன்னெடுக்க வேண்டும், அப்படித்தான் எமது அரசியலும் மாற்றப்பட வேண்டும், காலம் காலமாக வந்தோம் என்பதற்காகவும் பாராம்பரியமாக பின்பற்றி வருகின்றோம் என்பதற்காகவும் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற போதும் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத மக்களை செல்வநாயகம் கூறியது போன்று கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதாகும்.

அல்லது வைரமுத்து கூறியது போன்று பட்டு வேட்டி கனவினை பேச்சிலே ஆசை காட்டி மிதக்க விட்டுவிட்டு இங்கு கட்டி இருக்கின்ற கோவணமும் களவாடப்படுகின்ற சூழ்நிலையில் அரசியல் பேசிச் சென்றால் காலத்திற்கு ஒரு முறை பிள்ளையான் வருவார், அல்லது அடைக்கலநாதன் கல்முனையை பார்த்து விட்டு 2 நிமிடம் பாராளுமன்றத்தில் பேசிச் செல்வார், அல்லது நல்லாட்சியில் மற்றுமொருவர் வாக்குறுதி வழங்குவார், அல்லது முன்னாள் எம்.பிக்கள் ஜனாதிபதியை சந்திப்பார்கள், அவ்வாறு அம்பாறை மாவட்ட அரசியல் பாராம்பரியத்தை எவரும் மாற்ற நினைத்தல் அது முடியாத காரியமாகும்.

எனவே ஒரு பொறுப்புள்ள கட்சியின் தலைவனாக நான் உங்களிடம் சிறப்பாக சிந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன், எமது சமூகப் பிரிவினை பிரதேச பிரிவினைகளை மாற்றி எவ்வாறு நாங்கள் திட்டமிடப் போகின்றோம், அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுக்க போகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதற்கு எப்படி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும், ஏனைய கட்சிகளையும் இப்பொது வேலைத்திட்டத்தில் எவ்வாறு இணைக்க முடியம் என்பதை சிந்திக்க வேண்டும், அந்த புள்ளியை எமது கட்சி நிச்சயமாக சந்திக்கும், இதன் ஊடாக தூய்மையான அரசியலை எம்மால் முன்னெடுக்க முடியும், என குறிப்பிட்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்