இலங்கையின் நகர்ப்புறங்களில் வசிக்கும் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அதிக எடை அல்லது உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பதாகக் சிறுவர் நல மருத்துவ நிபுணர் மகேஷக விஜயவர்தன கவலை தெரிவித்துள்ளார்.
உலகளவில் பொது சுகாதாரத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள சிறுவர் உடற்பருமன், தற்போது இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் ஒரே நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடும் மற்றும் உடற்பருமனும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை ஊட்டச்சத்து குறைபாட்டின் “இரட்டைச் சுமை” என்று அவர் குறிப்பிடுகிறார்.
சிறுவர்களின் வயது மற்றும் பாலினத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட உடல் நிறை குறியீட்டெண் மூலம் இது அளவிடப்படுகிறது.
இதில் 95 ஆவது சதவிகிதத்துக்கு மேல் இருப்பவர்கள் உடற்பருமன் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இதனைத் தொடக்கத்திலேயே கண்டறியத் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
உடற்பருமன் காரணமாகச் சிறுவர்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அசாதாரண கொலஸ்ட்ரால் அளவு.
டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் திறன்.
கல்லீரல் பாதிப்பு மற்றும் தூக்கத்தில் சுவாசக் கோளாறு.
எலும்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தோல் நோய்கள்.
குறைந்த சுயமரியாதை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்புகள்.
எதிர்காலத்தில் இதய நோய், சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் அபாயம் என்பனவும் இவற்றில் உள்ளடங்கும்.
எனவே சிறுவர் உடற்பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் உட்கொள்ளுதல்.
உடல் உழைப்பு குறைதல் மற்றும் அதிக நேரம் திரையைப் பார்த்தல்.
போதிய உறக்கமின்மை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தடுக்க சுகாதாரத் துறை, பாடசாலைகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
முறையான பாடசாலை உணவுத் திட்டங்கள், உணவு விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையிலான நகர்ப்புறத் திட்டமிடல் போன்றவை அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.